நாளை ( 02-10-2017 ) கிராம சபை கூட்டம்
நாட்டில் மொத்தமுள்ள 12,524 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. வருகிற அக்டோபர் 2-ம் தேதியும் (நாளை) அப்படியொரு கூட்டம் நடக்கவுள்ளது. கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் ஒவ்வொருவரும் இதன் உறுப்பினர்களே. இப்படி, கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கிராமசபை பஞ்சாயத்தில் இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் நடக்கவுள்ளதை ஏழு நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம், வட்டார வளர்ச்சி அலுவலருக்குத் தகவல் போகும். அவர் மூலமாக அது, கிராம மக்களுக்குப்போகும். ஒவ்வொரு மூன்று மாத வரவு செலவு கணக்கு, முறைப்படி தணிக்கை செய்யப்பட்ட கணக்கு ஒப்படைப்பு என்று ஏறக்குறைய சட்டமன்ற, நாடாளுமன்ற செயல்பாடு போலவே அது இருக்கும்.
கிராம சபைக் கூட்டம் கூடி ஆய்வு முடிந்ததும், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் உள்ள ‘மினிட்’ புத்தகத்தில் ஒவ்வொரு திட்டத்துக்கும் கிடைத்த ஆதரவு - எதிர்ப்புகள் மக்களின் கையெழுத்துடன் பதிவில் ஏறிவிடும். அந்தந்த கிராமத்துக்கு அதன் நகல் ஒன்றை அப்போது கொடுப்பார்கள். இப்போது கிராம மக்களின் பார்வைக்கே அந்த மினிட் புத்தகம் வராதபடி அதிகாரிகள் செயல்படத் தொடங்கிவிட்டனர். இது, மக்களுக்கு எதிரான எந்த முடிவையும் ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும். எந்தத் திட்டத்தையும் மக்களுக்கு எதிராக இதன் மூலம் அரங்கேற்றலாம். நிதிவிவகாரங்களில் மோசடி செய்யலாம். அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு இன்னும் நிறைய கெடுதல் செய்யலாம்.
அக்டோபர் 2-ம் தேதி நடக்கும் கிராமசபைக் கூட்ட முடிவில் ‘மினிட்’ புத்தகத்தில், தாங்கள் கையெழுத்துப் போட்ட பிரதியை ஜெராக்ஸ் எடுத்துத் தரும்படி மக்கள் கேட்கப் போகிறார்கள். நிச்சயமாக அதிகாரிகள் தர மறுப்பார்கள், மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். மக்கள் விழித்துக்கொள்ள இவர்களே வாய்ப்பு கொடுத்துள்ளனர், இது நல்லவிஷயம்தான். ‘மினிட்’ புத்தகம் குறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரத்தை நாங்கள் கிராமம், கிராமமாகப் போய் செய்யத் தொடங்கியிருக்கிறோம். ஆட்சியாளர்களும், அவர்களுக்கு துணையாக மக்களுக்கு எதிராகச் செயல்படும் அனைவரும் சிக்கப்போகிறார்கள். மக்களைக் காப்பாற்ற எங்களோடு ஊடகங்களும் துணை நின்றால், மக்கள் உரிமையை மீட்டெடுக்கலாம்.
உலகவங்கி நிதி முதற்கொண்டு அனைத்தும் நாட்டுக்குக் கடனாகக் கிடைப்பது கிராமங்களை முன்னிறுத்திதான். அந்த நிதியைக் கொண்டுதான் சட்டமன்றமும், நாடாளுமன்றமும் எளிதாகப் பயணித்துக்கொண்டிருக்கின்றன. கிராமங்கள் இல்லையென்றால் அரசுகளும் இல்லை
0 Comments